Monday, February 7, 2011

நேரம் இருந்தா கொஞ்சம் பாத்துட்டு போங்க.............

இன்று நான் வீட்டில் இருக்க நேர்ந்தது. நேரம் போகாமல் டீவியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன் . ஸ்டார் மூவிசில் அப்பொழுதுதான் ஒரு படத்தின் பெயர் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் தலைப்பே கவர்ந்தது. இதற்கு முன் இதன் முடிவை மட்டும் யதேச்சையாக பார்க்க நேரிட்டது . இன்று முழுவதும் பார்த்து விடுவது என்று அமர்ந்தேன். சும்மா சொல்லக் கூடாதுங்க படத்தை அவ்வளவு அழகா எடுத்துருக்காங்க .. நேர்த்தியான காட்சி அமைப்புகள் ... நீங்களும் பார்க்கணும் தான் இதை எழுதறேன் ..சரிங்க படத்துக்கு போலாம் வாங்க...


ஜெர்மனியின் தலை நகரமான பெர்லினில் படம் துவங்குகிறது. படத்தின் நாயகனாக சிறுவன் ப்ரூனோ ( Bruno (Asa Butterfield)). ராணுவத்தில் உயர் அதிகாரியான அப்பா , அமைதியாக அம்மா , அக்கா என்று சிறு குடும்பம் . தன் நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றி திரிந்து கொண்டிருக்கும் வேளையில் அப்பாவிற்கு கமேண்டேண்டாக பதவி உயர்வு கிடைத்து இடம் பெயர வேண்டிய நிலைமை வருகிறது. விருப்பம் இல்லாமல் புதிய வீட்டிற்கு பயணிக்கிறான் ப்ரூனோ ..
இங்கே ப்ரூனோ சந்திக்கும் நிகழ்வுகளையே படமாக்கி இருக்கிறார்கள் . புதிதாக வந்துள்ள வீட்டிற்கு அருகிலேயே அப்பா தலைமை பொறுப்பாற்றும் சிறை ((concentration camp), அரசியல் கைதிகளையும் , போர்க் கைதிகளையும் அடைத்து வைக்கும் இடம்) இருக்கிறது. ஆனால் இது அவர்களுக்கு தெரியாது .அவனிடம் விவசாயம் செய்யும் இடம் என்றே  கூறி இருப்பார்கள்.ஒரு நாள் தனது அறையில் இருந்து ஜன்னல் வழியாக ப்ரூனோ இதில் கைதிகள் வேலை செய்வதைக் காண்கிறான். அவர்களுக்கெல்லாம் கோடு போட்ட கைதி உடை(striped dress) கொடுக்கப் பட்டிருக்கும். புரியாமல் இதை பற்றி அம்மாவிடம் கேட்கிறான். அம்மா இனிமேல் அந்த பக்கம் பார்க்க கூடாது என அறிவுறுத்துகிறாள் .

வேண்டாம் என்பதை செய்ய தூண்டும் வயது. அடுத்த நாள் அம்மாவிடம் விளையாட போவதாக கூறிவிட்டு சிறைச்சாலை பக்கம் செல்கிறான். சிறை என்று தெரியாமல்.
அங்கே அவனுடைய வயதில் ஷுமுயேல் (Shmuel (Jack Scanlon))-ஐ சந்திக்கிறான்.அவன் அங்கே கைதியாக இருக்கிறான், தனிமையில் வாடிய ப்ரூநோவுக்கு  அவனுடைய வயதில்கிடைத்த நண்பனுடன் தனது நட்பை தொடர்கிறான். தினமும் அவனுக்கு சாப்பிடுவதற்கு பொருட்கள் எடுத்து செல்கிறான். இந்நிலையில் ப்ரூனோவிற்கு பாடம் சொல்லி கொடுக்க ஒரு ஆசிரியரை நியமிக்கிறார் அப்பா. ஆசிரியரால் சொல்லி தரப்படும் ஜெர்மனி ராணுவத்தைப்  பற்றிய கொள்கைகளும்  சிறைக் கைதிகளை பற்றிய அவருடைய கருத்தும் ப்ரூனோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது கீழே விழுந்து ப்ரூனோவுக்கு அடி பட்டு விடுகிறது. தன்னுடைய வீட்டில் சமையல் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் சிறை கைதியான பவல் அவன் காயத்திற்கு கட்டு போட்டு விடுகிறார்.தான் ஒரு டாக்டர் என்று  கூற, பின்னர் ஏன் இப்படி வீட்டு  வேலை செய்ய வேண்டும் என்று அவரிடம் ப்ரூனோ கேட்கிறான் . அந்த நேரத்தில் ப்ரூனோவின் அம்மா வந்து விட அங்கே மௌனம். ஒரு கைதிக்கு நன்றி சொல்ல அவள் தயங்கும் அந்த காட்சியை அழகாக எடுத்திருக்கிறார்கள். அம்மாவாக நடித்திருக்கும் எல்சாவின் ( Elsa (Vera Farmiga) நடிப்பு அருமை..

அங்கு குடியேறிய சில நாட்களில் ராணுவ அதிகாரியாக வரும் கோட்லர் (Lieutenant Kurt Kotler)மூலமாக தனது கணவரின் ராணுவ அதிகாரத்தை பற்றி அவளுக்கு தெரிய வருகிறது. கைதிகளை அடைத்து வைக்கும் சிறை அது அல்ல கும்பல் கும்பலாக அவர்களை கொன்று குவிக்கும் இடம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். அன்று முதல் கணவனுக்கும் அவளுக்கும் இடையே பிரச்சினைகள் எழுகிறது.

 ஒரு நாள் உணவருந்தும் வேளையில் பரிமாறிக் கொண்டிருந்த சிறைக் கைதி பவலின்(ப்ரூனோவின் காயத்திற்கு கட்டு போட்டு விட்டவர் ) கை பட்டு ஒயின் கீழே கொட்டி விட ராணுவ அதிகாரி கோட்லர் அவரைத் தாக்க பாவம் அவர் உயிரிழக்கிறார் . இதை கண்டும் தடுக்காத தனது கணவரின் போக்கை கண்டித்து வாதிடுகிறாள்..

 அடுத்ததாக வீட்டில் வேலை செய்வதற்காக வேறு கைதிகள் அழைத்து வர படுகிறார்கள் அதில் ஷுமுயேல் (Shmuel)-சும் வருகிறான்.ப்ரூனோ அவனை தனது வீட்டில்பார்த்தமகிழ்ச்சியில் அவனுக்கு சாப்பிடுவதற்கு கேக்கை கொடுக்கிறான்.
அந்த நேரத்தில் கோட்லர் வந்து விட ஷுமுயேல்-சை கோபப் பார்வை பார்க்க அவன்ப்ரூனோ தான் சாப்பிடுவதற்கு தந்தாக கூறுகிறான். ஆனால் ப்ரூனோ கோட்லர் மேலுள்ள பயத்தினால் தான் கொடுக்கவில்லை என்று பொய் சொல்ல , கோட்லர்  ஷுமுயேல் திருடியதாக குற்றம் சாட்டி அவனை தண்டிக்கிறான் .

தான் செய்த காரியத்திற்காக வருத்தப் படும் ப்ரூனோ அதன் பின் தினமும் சிறைச்சாலையின்பின் புறம் செல்கிறான். ஆனால் ஷுமுயேல்-சை காணவில்லை. ஒரு நாள் ஷுமுயேல் வருகிறான் ஆனால் கோட்லர்- ஆல் கண்களின் மேலே தாக்க பட்ட காயத்துடன்.
இருந்தாலும் ப்ரூநோவை மன்னித்து விடுகிறான். இந்த இடத்தில் இரண்டு சிறுவர்களுமே நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ...

ப்ரூனோவின் அம்மா தன் கணவனுடன் சண்டையிட்டு தன் அத்தை வீட்டிற்கு செல்வதாக முடிவெடுக்கிறாள். இந்த இடத்தில் தன் குழந்தைகள் வளர்வதை விரும்பவில்லை இனி எப்போதும் இங்கே திரும்பி வருவதில்லை என்று முடிவு செய்கிறாள். இதனால் ப்ரூனோ மிகவும் மனமுடைந்து போகிறான். இறுதியாக ஷுமுயேல்-சை பார்த்து விட வேண்டும் என்று அவனை காண செல்கிறான். அந்நேரத்தில் தனது சிறைக்குள் காணமல் போய் விட்ட தந்தையை கண்டு பிடிக்க உதவுமாறு ப்ரூனோவிடம் ஷுமுயேல் கேட்க மறுக்க முடியாமல் சரி என்கிறான். ஆனால் இதற்கு சிறைச்சாலைக்கு உள்ளே செல்ல வேண்டும். எப்படி என்று யோசிக்கும் போது சிறை கைதியின் உடையை(striped dress) ஷுமுயேல் திருடி கொண்டு வந்து தருகிறான்.


அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்கு உள்ளே சென்று ஷுமுயேல்-ன் அப்பாவை தேடிக் கொண்டிருக்கும் போது கைதிகளை கும்பலாக கொள்வதற்காக அழைத்து செல்ல படுகிறார்கள். அந்த கும்பலில் சிறுவர்கள் இருவரும் சிக்கி கொள்கிறார்கள் .துணிகளை எல்லாம் கழற்ற சொல்கிறார்கள். ஆனால் கைதிகள் இது தெரியாமல் குளிப்பதற்காக அழைத்து வரப பட்டிருக்கிறோம் என்று நினைக்கின்றனர்..


அப்பொழுதுதான்  ப்ரூநோவை காணவில்லை என்றுதேட தொடங்குகிறார்கள் . அவன் சென்ற வழியெல்லாம் தேடி கடைசியாக சிறைச்சாலையை அடைகிறார்கள்.. அங்கே வெளியே மின்சார வேலிக்கு கீழே குழிதோண்டப் பட்டு ப்ரூனோவின் துணிகள் அவிழ்த்து போட பட்டிருக்கும். சிறைக்குள் தான் அவன் இருக்கிறான் என முடிவு செய்து அவர்கள் உள்ளே நுழைகிறார்கள் ..

ஆனால் அதற்குள் Zyklon B என்ற விஷ வாயு செலுத்த பட்டு கும்பலாக கைதிகள் கொல்லப்படுகின்றனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவர்.

மழை பெய்ய தொடங்குகிறது . மின்சார வேலிக்கு கீழே கிடக்கும் ப்ரூனோவின் ஆடையைப் பார்த்து  அவன்  அம்மா அழும் காட்சியில் நமது கண்களிலும்  கண்ணீர் வரும்.


 இறுதியாக கைதிகள் கொள்ளப்படும் அறைக்கு வெளியே கைதிகள் அவிழ்த்து துணிகளை(striped dress) காட்டி அந்த காட்சி உடனே  படத்தை முடிக்கிறார்கள் .....

படத்தில்  வன்முறையான காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை என்றாலும் ஜெர்மனி ராணுவத்தின் அடக்கு முறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ...  இயக்குனரின் திறமையை பாராட்டலாம் .


படத்தின் இடையே விளம்பரம் போடும் போது நம் தமிழ் சேனல்கள் பக்கம் வர நேர்ந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் நடித்த நாயகன் படம் போட்டிருந்தார்கள். சும்மா டெரரா நடிச்சிட்டு???????? இருந்தாரு ... வெல வெலத்து போயி நான் ஸ்டார் மூவீஸ் கே ஓடிட்டேன்க .. 

படத்தில் நடித்திருந்த அனைவரும் தனதுபங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .. குறிப்பாக அம்மாவாக வரும் எல்சா , சிறுவர்கள் ப்ரூனோ மற்றும் ஷுமோல் இயல்பாக நடித்திருக்கிறார்கள்... நல்ல திரைக்கதை ..நாவலாக வெளிவந்த கதையைதிரைப்படம் ஆக்கிஇருக்கிறார்கள் ...2008 ல் வெளி வந்தது இந்ததிரைப்படம் ...

முடிந்தால்டவுன்லோடு செய்து பாருங்கள் .. நன்றி ....